புதுச்சேரி மாநில உள்நாட்டு மீனவர்கள் அமைச்சர் மல்லாடியிடம் கோரிக்கை !



புதுச்சேரி மாநில பருவதராஜ குல சங்கத்தினர் சங்க தலைவர் த.தண்டபாணி (எ) பழனிவேல் தலைமையில் புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்களை அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
1.   புதுச்சேரி மாநில உள்நாட்டு மீனவர்களுக்கு, புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள தடைக்கால, சீற்றகால நிவாரண உதவி தொகைகள் மற்றும் வேட்டி – புடவை போன்ற உதவிகளை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறோம்.
2.   புதுச்சேரி மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு மீனவர்கள் ஆற்றில் தொழில் செய்ய உரிய கட்டுமரம், வலை போன்ற உபகரணங்கள் அரசால் வழங்கப்படவில்லை.
இந்நிலையை போக்கிட ஆற்றில் மீன்பிடித்து அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களுக்கு கட்டுமரம், வலை போன்ற தொழில் கருவிகளை வழங்க புதுச்சேரி அரசு ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

3.   புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குளம், குட்டை, ஆறு, ஏரி, தடுப்பணை போன்ற அனைத்து நீர் நிலைகளிலும் மீன் வளர்க்கவும்,  மீன்களை குத்தகை எடுக்கவும், உரிய உரிமங்களை அந்தந்த கிராம கொம்யூன், நகராட்சி அளவிலான உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க உரிய அரசாணை பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்.

4.   புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரை கிராமங்களில் மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுவது போல், உள்நாட்டு மீனவர்களுக்கு அவர்கள் வாழும் கிராமங்களில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்.

5.   ஆறுகளில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுகள் கலப்பதால், வாழ்வாதாரத்துக்காக தங்கள் பாரம்பரிய வழக்கப்படி ஆற்றில் இறங்கியும், கட்டுமரங்களில் சென்றும் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்கள் பலவகை தோல் நோய்கள் உள்ளிட்ட  தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. ஆகவே அனைத்து மீனவ கிராமங்களிலும், மருத்துவபரிசோதனை முகாம்களை மீன்வளத்துறை – சுகாதாரத்துறை இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

6.   பாரம்பரியமாக வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் பழங்குடியினரான மீனவ மக்கள் பல தீராத நோய்களுக்கு ஆளாவதால் புதுச்சேரி அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கியுள்ள தீராத நோய் தாக்குதலுக்கு உள்ளவர்களுக்கான மாத நிதி உதவி திட்டத்தைப் போல் மீனவர்களுக்கும் மாதம் ரூ.3000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

7.   புதுச்சேரி மாநிலத்தில் வாழும் மீனவ சமுதாயத்தினர் அனைவரையும் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இக்கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு, மத்திய அரசை அணுகி மீனவர்களை பழங்குடியினராக அங்கீகரிக்க உரிய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
        இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.      அமைச்சருடனனான சந்திப்பின் போது தேசிய மீனவர் பேரவை தலைவர், மா. இளங்கோ,  சங்க  நிர்வாகிகள் பொன். கோவிந்தசாமி, வா. முருகன், ப. ஹரிதாஸ், காந்தி (எ) பாவாடைசாமி, அ. கருணாகரன், கோ.சிட்டிபாபு ஆகியோர் உடனிருந்தனர்.
Previous
Next Post »
0 Komentar